ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பல்லவர்கள் தமிழரே!

பல்லவர்கள் தமிழரே!
பல்லவர்கள் யார்?
பல்லவர்கள் தொண்டைநாட்டின் குறுநில மன்னராயிருந்த தமிழ் மன்னர்களான தொண்டைமான் வழிவந்த தமிழர்களே. தொண்டைமான் இளந்திரையன் என்போன் சங்ககாலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட சிறப்புமிக்க தமிழ் மன்னன் ஆவான். சங்க காலத்திற்குப் பிறகு பல்லவப் பேரரசு அமையும்வரை தொண்டைமான்கள் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர் பேரரசுக்குக் அடங்கிய குறுநில மன்னர்களாக இருந்துள்ளனர்.
தொண்டைமான்கள் சோழர்களின் வழித்தோன்றல் ஆவர்.
பல்லவ மன்னர்கள் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் என்பதாலேயே பல்லவ மன்னர்களின் வழிவந்த சில மன்னர்களும் தளபதிகளும் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர். குலோத்துங்க சோழனின் படைத் தளபதியாய் இருந்த கருணாகரத் தொண்டைமானைப் "பல்லவர் தோன்றல்" என்று புகழ்கிறார் ஜெயங்கொண்டார். பல்லவ  வழித்தோன்றலாக இருந்த கருணாகரன் தொண்டைமான் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? பல்லவ மன்னர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.

பல்லவர்களின் முன்னோரான தொண்டைமான்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கும்
உண்மை.
கருணாகரத் தொண்டைமானைக் கலிங்கத்துப்பரணி 535 ஆவது பாடலில் "பல்லவர் தோன்றலைப் பாடீரோ" என்கிறார் ஜெயங்கொண்டார்.
இதே கருணாகரத் தொண்டைமானைச் சிலை எழுபது என்ற நூலின் 68ஆவது பாடலில்-
" புவிக்காயிரம் பொன் இறைநீக்கி
கவிக்காயிரம் பொன் பரிசளித்தான்
கருணாகரத் தொண்டை வன்னியனே "
எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்.
கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் என்று அடையாளப்படுத்துகிறார்.
அதே தொண்டைமான் வன்னியர் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் அடையாளப்
படுத்துகிறார்.

ஆகவே பல்லவர்கள் தமிழர்தான். கம்பர் எழுதிய சிலை எழுபது என்ற நூலின் மூலம் பல்லவர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது.

தென்னிந்தியாவில் அமைந்த வலிமையான முதல் பேரரசு தமிழர்கள் அமைத்த பல்லவப் பேரரசு.
தமிழர்களான பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 9 நூற்றாண்டுகள் வலிமையான பேரரசாக இருந்து நல்லாட்சி செய்தார்கள். அதன்பிறகு காடவராயர், சம்புவராயர் என்ற பெயர்களில் குறுநில மன்னர்களாக இருந்தும் ஆண்டார்கள். பிற்கால சோழ, பாண்டிய பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகும் தெலுங்க நாயக்கர் ஆட்சிக்காலத்தில் உடையார்பாளையம், முகாசா பரூர் ஆகிய பகுதிகளில் பாளையக்காரர்களாக ஆட்சி செய்தனர். அதன்பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  உடையார்பாளையம், முகாசா பரூர் ஆகிய ஜமீன்களுக்கு ஜமீன்தாரர்களாகவும் தொடர்ந்து ஆட்சி செய்தனர். ஜமீன் ஒழிப்புச் சட்டம் வரும்வரை பல்லவர் வழிவந்தோர் ஜமீன்தாரர்களாக இருந்துவந்தனர்.
இப்போதும் வாழும் பல்லவ வழித்தோன்றல்கள் உடையார்பாளையத்திலும், முகாசா பரூரிலும் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகப் பகுதியான தொண்டைநாடு ஆந்திர எல்லைக்கு அருகில் இருப்பதால் பல்லவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவின் பெரும்பகுதியைப் பிடித்து ஆளுவதற்கும் வசதியாக இருந்துவிட்டது.

பல்லவர்கள் தமிழகம், ஆந்திரம் மட்டுமல்லாமல் கடல்கடந்து இலங்கை, மலேசியா, கம்போடியா வரை சென்று ஆட்சி செய்தனர். கம்போடியாவின் அங்கோர்வாட் என்ற உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத் தளத்தைப் பல்லவர்கள்தான் கட்டினர்.

பல்லவர்கள் தொடக்க காலத்தில் பிராகிருத மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். சங்க காலத்திற்குப் பிறகு பல்லவப் பேரரசு அமைவதற்கு முன்பு தொண்டைமண்டலம் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர் பேரரசுக்கு கட்டுப்பட்டு அடங்கிய நாடாக இருந்ததால் முற்காலப் பல்லவர்கள் சாதவாகனப் பேரரசின் தாக்கத்தால் பிராகிருத, சமஸ்கிருத ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். பல்லவப் பேரரசு அமைவதற்கு முன்பே வட இந்தியாவிலிருந்து சமண, பௌத்தத் துறவிகளும், சமஸ்கிருத வைதீகர்களும் காஞ்சிபுரத்தில் குடியேறி அவர்தம் பிராகிருத, சமஸ்கிருத மொழிகளை மதத்தளத்தில் பரப்பி இருந்ததும் முற்காலப் பல்லவர்கள் பிராகிருத, சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டமைக்கு காரணம் ஆகும்.

பல்லவர்கள் தொடக்கத்தில் சமணத்தைத் தழுவி இருந்தனர். முற்காலப் பல்லவர்கள் சமணத்தைத் தழுவியிருந்த போது பிராகிருதத்தையும், பிறகு இடைக்காலப் பல்லவர்கள் வைதீகத்தைப் பின்பற்றிய போது சமஸ்கிருதத்தையும், பிற்காலப் பல்லவர்கள் சைவத்தைப் பின்பற்றிய போது தமிழையும் ஆட்சிமொழியாகக் கொண்டிருந்தனர். சமண, பௌத்த, வைதீக சமயங்கள் சங்க காலத்திற்குப் பிறகு காஞ்சிபுரத்தில் செல்வாக்குடன் பரவியிருந்தன. சமண, பௌத்த மதங்களின் மொழி பிராகிருதம். வைதீக மதத்தின் மொழி சமஸ்கிருதம். தமிழரின் சைவம் தமிழைச் சமய மொழியாகக் கொண்டு வளர்ந்தது. பல்லவர்கள் பிராகிருதம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளை முறையே ஆட்சி மொழிகளாகக் கொண்டிருந்தமைக்கு அவர்கள் பின்பற்றிய மதங்களே முதன்மைக் காரணம் ஆகும்.
தற்காலத்தில் இசுலாம் மதத்தைத் தழுவியுள்ள சில தமிழர்கள் அரபு மொழியைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றனர் அல்லவா? இந்துக்கள் சமஸ்கிருதத்தில் வழிபாடு, திருமணச்சடங்கு போன்றவற்றைச் செய்யவில்லையா? அப்படித்தான்.

பல்லவர்கள் தம்மைப் பரத்வாஜ கோத்திரத்திலிருந்து வந்த சத்திரியர்கள் என்று கல்வெட்டுகளில் பதிந்துள்ளனர் எனவும் அதனால் பல்லவர்கள் ஆரியர் எனவும் தமிழரல்லர் எனவும் சிலர் சொல்கின்றனர்.
தமிழகத்தில் வட இந்திய ஆரிய கலாச்சாரமும் மனுதரும நால்வருண கோட்பாடும் புகுந்த பிறகு பல தமிழ்க்குடிகள் தம் சாதிப் பெயரை வடமொழிப்படுத்தி புராணமயப்படுத்தினர்.
எடுத்துக்காட்டாக, கொங்கு மண்டல வேளாளர்கள் தம்மை மரபாள வம்சம் என்றனர். வடமொழியின் மரபாள புராணத்தைத் தழுவி வேளாள புராணம் எழுதிக்கொண்டனர்.
கோனார் என்னும் இடையர்கள் தம்மை யாதவர் என்று சொல்லிக்கொண்டனர்.
தொண்டை மண்டலம், நடுநாடு, வட கொங்கு மண்டலம் ஆகியவற்றைப் பூர்வீகமாக கொண்ட வன்னியர்களான பள்ளிகள் தம்மை அக்னி வம்சம் என்று சொல்லிக்கொண்டனர். வடமொழியில் உள்ள ஆக்னேய புராணத்தைத் தழுவி வன்னிய புராணம் எழுதிக்கொண்டனர்.
தச்சர்கள் தம்மை விஸ்வாமித்திர கோத்திரம் என்று சொல்லிக்கொண்டனர்.
நாடாண்ட மன்னர்கள் தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொண்டனர்.
இவ்வாறே பல தமிழ்க்குடிகள் பெருமைக்காக வடமொழிப்பெயர்களையும் வடமொழி புராணங்களையும் தமக்கு ஏற்றிக்கொண்டன.
பல்லவர்கள் சொல்லும் பரத்வாஜ கோத்திரம் என்பதும் அவ்வாறுதான்.

பல்லவர்கள் தமிழர் என்பதில் ஐயமில்லை.

பல்லவர் பற்றிய முந்தைய வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் மறு ஆய்வுக்கு உட்பட்டவை.
முந்தைய வரலாற்று ஆய்வாளர்களின் பல்லவர் பற்றிய தரவு சேகரிப்புக்கு செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி நூலின் செய்தியும், கம்பரின் சிலையெழுபது நூலின் செய்தியும் எட்டாமல் இருந்திருக்கிறது.
அதனால் "பல்லவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை" என்று பொத்தாம் பொதுவாக எழுதிவிட்டுச் சென்றனர்.
"பல்லவர்கள் யார் என்று தெரியவில்லை" என்று வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய காரணத்தால் பல்லவர்கள் மீது தெலுங்கர்கள் உரிமை கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.